முதல் சனி பக்தி முயற்சிகள்

 




மாதா பாத்திமாவில் கேட்டுக்கொண்ட

*முதல் சனி பக்தி முயற்சிகள்*

*மாதாவிற்கு நாம் விரும்பி செய்யும் பக்தி முயற்சிகளை விட, மாதா நம்மிடம் கேட்ட முதல் சனிப்பரிகாரபக்தியை பின்பற்றுவதும், கடைப்பிடிப்பதுமே மாதாவின் மீது  உண்மை பக்தியுள்ள பிள்ளைகளுக்கும், பக்தர்களுக்கும் அழகு.*

மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு நிந்தைப் பரிகாரமாக, ஒவ்வொரு மாதத்தின் முதல் சனிக்கிழமைகளில் நாம் செய்ய வேண்டியது 

1.நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து,

2.தேவமாதாவின் மாசற்ற இருதயத்திற்கு ஆறுதலாக பரிகார நற்கருணை உட்கொள்ளுதல்.

3.ஜெபமாலை ஜெபித்தல்.

4. மாதாவுடன் 15 நிமிடம் இருந்து தேவ இரகசியங்களைத் தியானித்தல்.


எதற்க்காக இந்த பரிகாரம் ?

1.ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த மரியாயின் அமல உற்பவத்திற்கு எதிராக மாதா ஜென்ம பாவத்தோடு பிறந்தார்கள் என்ற நிந்தைக்குப் பரிகாரமாக.

2. தேவதாயின் தெய்வீகத் தாய்மைக்கு எதிராக மாதா கடவுளின் தாயல்ல என்ற நிந்தைக்குப் பரிகாரமாக.

3. கன்னிமாமரி முப்பொழுதும் கன்னிகை என்னும் சிறப்புக்கு எதிராக மாதா கன்னியல்ல என்ற நிந்தைக்குப் பரிகாரமாக.

4. மாதாவின் உண்மை பக்தியை சிறுவர், இளைஞர்களிடம் போதிக்காமல் அழித்துவரும் நிந்தைக்குப் பரிகாரமாக.

5. அலைகையை வீழ்த்த மாதா தந்த செபமாலை குடும்பமாக தினமும் செபிக்காமல், நரகத்தை தவிர்க்கும் மாதா தந்த உத்தரியத்தை அணியாமல், பாவிகளை மனந்திருப்ப மாதா தந்த அற்புத பதக்கத்தை பயன்படுத்தாமல், மாதாவின் பக்திப் பொருட்களையும் உருவங்களையும் அகற்றி அவமதிப்பதற்க்குப் பரிகாரமாக.


*மாதா, கடவுள் அல்லவே பிறகு எதற்கு மாதவின் மாசற்ற இருதயத்திற்கு பக்தி முயற்சிகள்?*

மாதா கடவுள் அல்ல, அதே சமயம் மாதாவை பழிப்பதும் நிந்திப்பதும் மூவொரு இறைவனையும், தேவ இரகசியங்களையும் பழிப்பதாக மாறுகின்றன எவ்வாறு ?

மாதா ஜென்மபாவத்தோடு பிறந்தார்கள் என்ற நிந்தையானது, மாதா இயேசுவை பாவத்தோடு பெற்றெடுத்தார்கள், இயேசு பாவத்தோடு பிறந்தார் என்ற அர்த்தமாக இயேசுவிற்கு மாபெரும் நிந்தையாக  மாறுகின்றது.

*அருள்நிறைந்தவள்* லூக்கா 1-28 என்று கபிரியேல் சம்மனசு வழியாக தந்தையாம் கடவுள் வாழ்த்திய வாழ்த்தின் அர்த்தம் மாதா பாவமில்லாதவர்கள் அருளால் நிரம்பியவர்கள் என்பதே,

"கருவுற்று *ஒரு* மகனைப் பெறுவீர்;*லூக்கா 1-31 மாதாவிற்கு *ஒரே ஒரு மகன் தான்* என்ற வார்த்தை தந்தையாம் கடவுளுடையது.மாதாவிற்கு, இயேசுவை தவிர வேறு குழந்தைகள் இருக்கிறார்கள் என்று மாதாவை பழிப்பவர்கள் தந்தையாம் கடவுளுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் நிந்தையாக மாறுகின்றார்கள்.

*மாதா அமல உற்பவி*

*மாதா கடவுளின் தாய்*

*மாதா முப்பொழுதும் கன்னிகை* 

என்ற இந்த மகிமைகள் *மூவொரு இறைவனால் இயேசுவின் மனத அவதாரத்திற்காக மாதாவிற்கு வழங்கப்பட்டது* எனவே இந்த மகிமையையும், தேவ இரசியங்களையும் குறை சொல்பவர்கள்,விமர்சிப்பவர்கள் திரியேக கடவுளையே தங்களுக்கு தெரியாமலேயே நிந்திப்பவர்களாக,விமர்சிப்பவர்களாக, மாறும் எதிர்கிறிஸ்துக்கள்(Anti christ).

*பரிகார நற்கருணை என்பதென்ன?*

 நமதாண்டவருக்கும் மாதாவுக்கும் மனிதர்களால் இழைக்கப்படுகிற எண்ணற்ற நிந்தை அவமான துரோக அலட்சியங்களுக்கு ஈடாக நல்ல பாவசங்கீர்தனம் செய்து மிகுந்த பக்தி மரியாதை அன்புடன் நற்கருணைய ஆண்டவரை உட்கொள்ளுதலேயாகும்.  இதை இன்னும் அதிக தெளிவாகவும் அழுத்தமாகவும் சொல்கிறது பாத்திமா  3ம் காட்சி. அதிலே சம்மனசானவர் நற்கருணையுடன் வந்து மூன்று சிறுவர்களுக்கு வழங்கும்போது கூறியது.

“நன்றியற்ற மனிதரால் சகிக்கக்கூடாதவிதமாய் அவசங்கைப் படுத்தப்படுகிற சேசுகிறீஸ்துவின் திருச்சரீரத்தையும் திரு இரத்தத்தையும் அருந்தி பானம் செய்யுங்கள்.  அவர்களுடைய அக்கிரமங்களுக்காகப் பரிகாரம் செய்து உங்கள் கடவுளை ஆறுதல்படுத்துங்கள்.” 

இந்த வாக்கியங்களிலே பரிகார நன்மையின் முக்கியமான காரணம் கூறப்படுகிறது.  நமதாண்டவருக்கு மற்ற எந்த வகையிலும் செய்யப்படாத நிந்தையும் துரோகமும், அன்பின் தேவதிரவிய அனுமானமாகிய தேவ நற்கருணையில்தான் செய்யப்படுகின்றன.  ஆதலால் அன்பில்லாமல் செய்யப்படுகிற அவற்றிற்கு ஈடாக நாம் மிகுந்த அன்புடன் நற்கருணையை தகுந்த ஆயத்தத்துடன் உட்கொள்ள வேண்டும்.

மேலும் சம்மனசானவர், “உங்கள் கடவுளை ஆறுதல்படுத்துங்கள்” என்று கூறினார்.  ஏன்?  கடவுள் சம்மனசுக்களுக்குக் கடவுளாக இல்லையா?  மனிதர்களுக்கு மட்டுமா அவர் கடவுளாயிருக்கிறார்?   பிறகு ஏன் மனிதர்களிடம் , கடவுளை ஆறுதலப்படுத்த கேட்கிறார்.

ஏனெனில்,மனிதர்கள் நற்கருணையை அவசங்கைப்படுத்துவதுபோல சம்மனசுக்கள் ஒருபோதும் செய்வதில்லை. மேலும் சம்மனசுக்களைப்போல் அரூபிகளாயிருக்கிற பசாசுக்கள் நற்கருணையைப் பகைத்தாலும் அவர்களும் மனிதர்களைப்போல் நற்கருணையை அவசங்கைப்படுத்த முடிவதில்லை.  காரணம் அவர்களுக்கு சரீரமில்லை. 

சரீரமுள்ள மனிதர்கள் நற்கருணையைப் பழித்து நிந்தித்து அவமானப்படுத்துவதுபோல் பசாசுக்களால் செய்ய முடியாததால் பசாசுக்கள் “நன்றியற்ற” மனிதர்களை அந்தப் பழிப்புச் செயல்களுக்கு ஏவித் தூண்டுகின்றன.  நமதாண்டவர்  சம்மனசுக்களுக்கு மட்டுமல்லாமல் சரீரமுள்ள மனிதர்களுக்கு  கடவுளாயிருக்கிறார். 

இதனால்தான் பாத்திமாவில் தேவதூதர் “உங்கள் கடவுளை ஆறுதல்படுத்துங்கள்” என்று பிரித்துக் கூறினார். அதை நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு நம் நற்கருணை ஆண்டவருக்கு  முழு அன்புடனும் பரிகாரம் செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம்.  

*வசதி இல்லாதவர்கள்*

அநேக விசுவாசிகளுக்கு முதல் சனிக்கிழமைகளில் பாவசங்கீர்த்தனமோ நற்கருணையோ கிடைக்க வழியில்லாமலிருப்பதைப் பற்றி லூஸியா நமதாண்டவரிடம் கேட்டபோது 1930 மே 29‡ம் தேதி இரவில் லூஸியா ஜெபித்துக் கொண்டிருந்தபோது ஆண்டவர் இதற்குப் பதிலளித்தார். அப்படி முதல் சனிக்கிழமையில் பரிகாரக் கடமைகளைச் செய்ய வசதி இல்லாதபோது, அவற்றைக் குருவானவரின் அனுமதியோடு மறுநாள் முதல் ஞாயிற்றுக்கிழமையில் செய்து அதன் பலனை அடைந்து கொள்ளலாம். நியாயமான காரணமிருந்தால் குருக்கள் அந்த அனுமதியை வழங்கலாம் என்று ஆண்டவர் கூறினார்.

தொடர்ச்சியாக ஐந்து முதல் சனிக்கிழமை பக்தி முயற்சியைச் கடைப்பிடித்து ஒவ்வொரு மாதமும் ஒரு நிந்தைகளுக்காக ஒப்புக் கொடுக்க வேண்டும்.

*பலன்கள்*

முதல் சனி பக்தியைப் பிரமாணிக்கமுடன் அனுசரிப்பவர்களுக்கு மரண சமயத்தில் ஈடேற்றத்திற்கு அவசியமான சகல உதவிகளையும்  செய்வதாக நம் தேவதாய் வாக்களித்துள்ளார்கள்.


சேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!சூ

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!