உத்தரிக்கும் ஸ்தல ஆன்மாக்களின் புதுமைகள்
உத்தரிக்கிற ஸ்தல ஆன்மாக்களின் புதுமைகள்-52
7-ம் புதுமை
பிறர் பாவத்தில் விழக் காரணமாயிருந்த ஆத்துமங்கள் பெறும் கொடிய தண்டனை
ஸ்பெயின் நாட்டில் ஒரு கிறிஸ்தவன் ஓவியம் வரைவதில் கெட்டிக்காரனாயிருந்தான். அவன் வாலிபனாய் இருந்தபோது காம உணர்ச்சியைத் தூண்டும் வகையில் ஒருமுறை ஓர் ஓவியம் வரைந்தான். வெட்கப்பட்ட பலர் இந்தப் படத்தை பார்க்கக்கூடத் துணியவில்லை. அதை ஒரு பிரபு விலைக்கு வாங்கித் தன் மாளிகையில் வைத்தான். அதைக் கண்ட சிலர் மோக பாவத்தைக் கட்டிக் கொண்டவர்களாய் சில முறை பாவத்திலும் விழுந்தார்கள்.
இப்படி அடுத்தவரின் உணர்ச்சியைத் தூண்டுமளவுக்கு ஓவியம் வரைந்தவனுக்கு முதிய வயதில்தான் நல்ல புத்தி வந்தது. இத்தகு படத்தை வரைந்ததால் மிகவும் மனஸ்தாபப்பட்டு தான் செய்த பாவத்துக்குப் பரிகாரமாக செபித்தல் முதலான புண்ணிய காரியங்களைச் செய்தான். அத்தகைய படத்தை மறுபடியும் வரையாமல் தேவமாதா மற்றும் புனிதர்கள் பலரின் படத்தை வரையலானான். இப்படங்களைப் பார்த்த அநேகருக்கு பக்தி ஏற்படலாயிற்று. இறுதியில் ஒரு நாள் அந்த ஓவியன் நல்ல மரணமடைந்தான்.
அவன் இறந்து சில நாட்கள் ஆயின. ஒரு நாள் புனித தெரேசா சபையைச் சார்ந்த குருவானவர் ஒருவருக்கு அவன் தோன்றி "சுவாமி, என் பேரில் நீங்கள் இரக்கப்பட வேண்டும். ஏனெனில் நான் உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்கிறேன். ஆபாசப் படத்தை வரைந்ததற்காக அதை வரைந்த என் வலது கரம் இந்தக் கடுமையான நெருப்பில் தாங்க முடியாத வேதனையை அனுபவிக்கிறது" என்று கூறி துயரப்பட்டு அழுதான்.
குருவானவரோ "நீ பலமுறை தேவமாதா படங்களையும் புனிதர்களின் படங்களையும் வரைந்ததை நானறிவேன். இப்படியிருக்கையில் நீ எந்த பாவத்துக்காக இப்படி உத்தரிக்கிற ஸ்தலத்திலே மிகவும் அவதிப்படுகிறாய்?" என்று கேட்டார். ஓவியனின் ஆத்துமம் "நான் மரித்தவுடன் நடந்த தனித்தீர்வையில் கடவுள் முன்னிலையில் என்னுடைய நடவடிக்கைகளுக்கு கணக்கு கொடுக்கும்போது பசாசு என்னைப் பற்றி கடவுளிடம் ஒரு புகாரை முன்வைத்தது. என்னுடைய வாலிப வயதில் நான் ஆபாசமாக வரைந்த பெண்ணின் உருவம் தாங்கிய ஓவியம் இன்னமும் ஒரு பிரபுவின் அரண்மனையில் இருப்பதாகவும் அதைக் கண்ட சிலர் இன்னமும் மோக பாவத்தில் விழுந்து தங்களைக் கெடுத்துக் கொண்டிருப்பதாகவும் ஒரு சிலர் அந்தப் படத்தைக் கண்டு இரசித்து பெரும் சாவான பாவம் கட்டிக் கொண்டவர்களாய் நரகத்துக்குப் போனதாகவும் குற்றம் சாட்டியது.” அதற்கு என் காவல் சம்மனசானவர் "நான் முன்னே செய்த பாவத்துக்கு மனஸ்தாபப்பட்டு பரிகாரம் செய்ததையும் அதன்பின் மனம் திருந்தி தேவமாதா மற்றும் புனிதர்களின் படங்களை நான் வரைந்ததையும் அதன் மூலம் பலர் பக்தி மிக்கவர்களாக மாறியதையும் என் பொருட்டு ஆண்டவரிடம் எடுத்துக் கூறி எனக்காக சிபாரிசு செய்யவே ஆண்டவராகிய இயேசு என் பிழை பொறுத்து என்னை நரகத்துக்கு அனுப்பாமல் நான் செய்த பாவங்களைத் தீர்ப்பதற்காக உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பிலே என் வலது கையை புதைத்து இப்போதோ உத்தரிக்கிற ஸ்தலத்திலே வெகுகாலமாய் வேதனைப் பட்டுக் கொண்டிருக்கிறேன். பிரபுவின் அரண்மனையில் உள்ள ஆபாசப் படம் அழியும்வரை என் வேதனையும் மாறப்போவதில்லை. எனவேதான் உங்களைத் தேடி வந்திருக்கிறேன். நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும். நீங்கள் பிரபுவிடம் சென்று அந்த ஆபாச ஓவியத்தை உடனடியாக எரிக்கச் சொல்லி அறிவுரை கூற வேண்டும். உங்களுடைய யோசனையை அவர் ஏற்றுக் கொள்வதற்காக இன்னொரு செய்தியையும் அவருக்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும்” என்றது.
"இன்னும் சில நாட்களுக்குள் பிரபுவின் இரண்டு பிள்ளைகள் இறந்து போவார்கள். உங்கள் அறிவுரைக்கு அவன் செவிசாய்க்காவிட்டால் பிரபுவே கொஞ்ச நாட் களுக்குள் இறந்துவிடுவானென ஆண்டவர் கட்டளை யிட்டிருக்கிறார் என்பதையும் தெரிவிக்க வேண்டும்” என்றெல்லாம் அந்தக் குருவானவரைக் கேட்டுக் கொண்ட உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனைப்படும் ஓவியனின் ஆன்மா வேண்டுகோள் வைத்து மறைந்து போனது.
அதன்பின் குருவானவர் பிரபுவைச் சந்தித்து தமக்கு நேர்ந்த அனுபவத்தை அவனிடம் எடுத்துரைத்தார். இதைக் கேட்ட பிரபு பயந்து போனவனாய் உடனடியாக அந்த ஓவியத்தை தன் கையாலேயே தீயிலிட்டு எரித்தான். ஆனாலும் ஓவியனின் ஆன்மா குருவானவருக்குக் கூறியிருந்தபடியே சில நாட்களில் அந்தப் பிரபுவின் இரண்டு பிள்ளைகளும் இறந்து போயினர். மிகவும் அச்சப்பட்ட பிரபு அந்த ஆபாசப் படத்தை விலைக்கு வாங்கிய பாவத்துக்கும் பரிகாரமாய் தவம் செய்தது மட்டுமல்லாமல் பெரும் தொகை செலவிட்டு தேவமாதா படத்தையும், புனிதர்களின் அரண்மனையில் வைத்தான். படத்தையும் வாங்கி
பிரபுவின் மனம் மாறிய நடவடிக்கைக்குப் பிறகு உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனைப்பட்டுக் கொண்டிருந்த ஓவியனின் ஆன்மா மோட்சத்துக்குச் செல்வதை குருவானவர் தரிசனத்தில் கண்டார்.
சகோதர சகோதரிகளே! ஓவியன் ஆபாச படத்தை வரைந்ததால் அதைக் கண்ட சிலர் அப்படத்தைக் கண்டு மோக பாவம் செய்தார்கள். இத்தகைய பாவத்துக்கு அவர்களை மறைமுகமாகத் தூண்டியதற்கு பொறுப்பாளனான அவன் மனம் மாறி செப தவங்களால் பரிகாரம் செய்தாலும் உத்தரிக்கிற ஸ்தலத்துக்குச் சென்று தன் பாவத்துக்குரிய கடின தண்டனையை அனுபவித்தான்.
இவ்வுலகில் சிலர் மோக பாவங்களைத் தூண்டும் பாடல்களைப் பாடும்போது அந்தப் பாடல்களின் வழியாய் பாவம் கட்டிக்கொள்ள ஆசை ஏற்படும். சில பெண்கள் ஆடைகளினால் தங்களைக் கவர்ச்சிகரமாகக் காட்டிக் கொண்டு பார்ப்பவரின் கண்களுக்கு ஆவலாகி மோக பாவத்தில் விழச் செய்கிறார்கள். இப்படி அடுத்தவரை பாவத்துக்குத் தூண்டுபவர்கள் தாங்கள் உயிரோடிருக்கும்போத தங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதால் நரகத்துக்குப் போகாமலிருந்தாலும் உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போய் அதன் நெருப்பிலே மிகுந்த வேதனைகளை கட்டாயம் அனுபவிக்க வேண்டியது வரும் என்பதை மறக்க வேண்டாம்.
எனவே, உங்களுக்குள்ளே அப்படிப்பட்ட தண்டனை கிடைக்காதபடி மோக பாவங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். ஆபாசப் பாடல்களைக் கேட்கவும், இச்சையான பார்வைக்கு இடம் கொடுக்கவும் வேண்டாம். பெண்களே நீங்களும்கூட இத்தகு தீய பார்வைக்கு இடம் கொடுக்காதீர்கள். அந்த ஓவியன் செய்த பாவத்துக்கும் பரிகாரமாக அவன் தேவமாதா படத்தையும், புனிதர்கள் படத்தையும் வரைந்தான். நீங்கள் துன்புறுத்தி சொல்வதால் ஆகாத பார்வைக்கு இடம் கொடுப்பதால் கெட்டுப்போகிறவர்களின் பாவங்களைத் தீர்க்கவும், அவர்கள் மனமாற்றம் பெறவும் அவர்களுக்கு அறிவுரை கூறுவதோடு அவர்கள் மனம் மாறி வாழ உதவியாய் இருக்க வேண்டும்.
அந்தப் பிரபு ஆபாசமான படத்தின்மீது பிரியம் கொண்டிருந்தாலும் அதை வரைந்த ஓவியன் உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பிலே அனுபவிக்கிற வேதனையைக் கேள்விப்பட்டு அவனுக்கு உதவும்படியாக அப்படத்தை தீயிலிட்டு எரித்தான். உங்களால் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்கு உதவி செய்ய வேண்டுமானால், நாம் அதிகம் நேசிக்கும் எப்பொருளையும் விற்று ஏழைகளுக்குத் தர்மம் செய்ய வேண்டும்.
இவ்வுலகத்தில் இருக்கிற வறியவர்களின் தன்பங்களைக் காண்பதால் நீங்கள் அவர்கள்மீது இரக்கப்பட்டு உதவி செய்வீர்கள். ஆனால், உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்கள் அனுபவிக்கிற கொடிய வேதனையை உலகில் வாழ்பவர்கள் பார்க்க முடியாததால் சிலருக்கு அந்த ஆன்மாக்கள் பேரிலே இரக்கம் ஏற்படுவதில்லை. பூமியில் இருப்பதைவிட உத்தரிக்கிற ஸ்தலத்து வேதனை மிகவும் கொடுமையானது என்று புனித அகுஸ்தினார் கூறியிருக்கிறார்.
உத்தரிக்கும் ஆன்மாக்களின் புதுமைகள் -52 புத்தகத்திலிருந்து.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment